மத்திய பிரதேச பல்கலையில் போலி சான்றிதழ் வழங்கி மோசடி : துணை வேந்தர், முன்னாள் துணை வேந்தர், பேராசிரியர்கள் கைது.! - ஐதராபாத் போலீஸ் நடவடிக்கை.!

போபாலில் உள்ள சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பல்கலைக் கழகத்தில் தேர்வுகள் எழுதாத, வருகை பதிவு இல்லாத மாணவர்களுக்கு பணம் பெற்றுக் கொண்டு பட்டம் பெற்றதாக  சான்றிதழ் விற்று மோசடி செய்ததாக துணை வேந்தர், முன்னாள் துணை வேந்தர் ஆகியோரை ஐதராபாத் சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் மத்திய பிரதேச உயர் கல்வித் துறை இது குறித்து விசாரிக்க உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

இது குறித்து ஐதராபாத் சிறப்புப் புலனாய்வுக் குழுவு போலீஸ் கமிஷனர் ஏ.ஆர்.ஸ்ரீனிவாஸ் நேற்று முன்தினம் கூறியதாவது: தெலங்கானா மாநிலத்தில் உள்ள மலக்பேட், ஆசிப் நகர், முஷிராபாத் மற்றும் சதர்காட் காவல் நிலையங்களில் போலி பட்டப்படிப்பு மோசடி தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த அனைத்து வழக்குகளும் சிறப்பு கண்காணிப்பு மற்றும் விசாரணைக்காக சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு (எஸ்ஐடி) மாற்றப்பட்டது.

இதில், மத்திய பிரதேச மாநிலம், போபாலில் உள்ள எஸ்ஆர்கே பல்கலைக்கழகம் சார்பில் மொத்தம் 101 கல்விச் சான்றிதழ்களை மாணவர்களுக்கு விற்பனை செய்துள்ளனர்.  இதில், மாணவர்களிடம் இருந்து 44 சான்றிதழ்கள் கைப்பற்றப்பட்டன. இந்த 44 சான்றிதழ்களில், 13 பி’ டெக் மற்றும் பிஇ படிப்புகளை சேர்ந்தவை. மீதமுள்ள 31 எம்பிஏ, பிஎஸ்சி போன்ற பல்வேறு பட்டச் சான்றிதழ்களாகும்.

இந்த வழக்கில் இன்சார்ஜ் துணைவேந்தர் டாக்டர் சுனில் கபூர் முன்ஜாமீன் பெற்ற நிலையில்,  எஸ்ஆர்கே பல்கலைக் கழகத்தின் உதவி பேராசிரியர் கேதன் சிங் மற்றும் ஐதராபாத் நகரின் பல்வேறு கல்வி நிறுவனங்களின் ஏழு முகவர்களும் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 19 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.  இதில் ஆறு மாணவர்களின் பெற்றோர்கள் முன்ஜாமீன் பெற்றுள்ளனர். மேலும் ஆறு மாணவர்களின் பெற்றோருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

எஸ்.ஆர்.கே. பல்கலைக் கழகம் உள்ள போபாலுக்குச் சென்று குற்றம் சாட்டப்பட்ட நபர்களான தற்போதைய துணைவேந்தர் டாக்டர் எம்.பிரசாந்த் பிள்ளை மற்றும் ஓய்வு பெற்ற துணைவேந்தர் மற்றும் தலைவர் டாக்டர் எஸ். எஸ்.குஷ்வாஹ் ஆகியோரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும், எஸ்ஆர்கே பல்கலைக் கழகத்தில் குற்றம் சாட்டப்பட்ட மீதமுள்ளவர்கள் மற்றும் மோசடியாக சான்றிதழ் பெற்ற மாணவர்களை கைது செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் பொறுப்பு துணைவேந்தரும் முன்னாள் துணைவேந்தரும் கைது செய்யப்பட்ட ஒரு நாள் கழித்து, மத்திய பிரதேச உயர் கல்வித் துறை இது குறித்து விசாரிக்க உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

தனியார் பல்கலைக்கழகங்களின் ஒழுங்குமுறை அமைப்பான மத்தியப் பிரதேச தனியார் பல்கலைக்கழகங்கள் ஒழுங்குமுறை ஆணையம், இந்த மோசடி வெளிச்சத்திற்க்கு வந்து மூன்று மாதங்கள் ஆகியும் இது தொடர்பாக SRK பல்கலைக்கழகத்திற்கு இது வரை விளக்கம் கேட்டு ஒரு நோட்டீஸ் கூட அனுப்பாதது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Ahamed

Senior Journalist

Previous Post Next Post