950 கிலோ குட்கா கடத்தல்: பெங்களுர் கோடீஸ்வரர் தூத்துக்குடியில் கைது - 10 வங்கிகளில் உள்ள 16 லட்ச ரூபாய் முடக்கம், கார், லாரி பறிமுதல்.!

 

தூத்துக்குடியில் கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த குட்கா கடத்தல்  மற்றும் மொத்த விற்பனையில் மூளையாக செயல்பட்டு  இல்லாத நிறுவனங்களை இருப்பதுபோன்று போலியாக உருவாக்கி, அதன் மூலம் பணம் சம்பாதித்த பெங்களுரை சேர்ந்த கோடீஸ்வரர் கைது செய்யப்பட்டார்

தென்மாவட்டங்களில் கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை அடியோடு ஒழிப்பதற்கு மதுரை தென்மண்டல ஐ.ஜி திரு. அஸ்ரா கார்க் அவர்கள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு பலர் கைது செய்யப்பட்டு பெருமளவில் குட்கா மற்றும் அவர்கள் பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இவ்வழக்குளில் சம்மந்தப்பட்டவர்களின் வங்கி கணக்குகளை முடக்கம் செய்து  பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்காவை தென்மாவட்டங்களுக்கு மூளையாக செயல்பட்டு மொத்த விற்பனை மற்றும் கடத்தலுக்கு மூல காரணமாக செயல்படுபவர்கள் யாரென கண்டுபிடித்து அடியோடு ஒழிப்பதற்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் மேற்பார்வையில் தூத்துக்குடி ஊரக காவல் உதவி கண்காணிப்பாளர் ஜி. சந்தீஸ் தலைமையில் எஸ்.ஐக்கள் அந்தோணிராஜ், சங்கர், சுந்தர் ராஜ் மற்றும் காவலர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து கண்டு பிடித்து தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து காவல் உதவி கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 25.06.2022 அன்று முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குட்கா கடத்தலில் கைது செய்யப்பட்ட  வாஷிம் பாஷா, செல்வா, காளிமுத்து, அருள்ராஜ் ஜேசுபாலன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் பயன்படுத்திய செல்போன்களை வைத்து, அவர்கள் யார், யாருடன் தொடர்பு கொண்டுள்ளனர், யார், யாருக்கு எவ்வளவு பணம் அனுப்பியுள்ளனர் என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்தனர்.

 மேற்படி விசாரணையில் கர்நாடக மாநிலம் பெங்களூர் பின்னிபேட் பகுதியை சேர்ந்த வேல்சாமி மகன் சாமுவேல் ஜெயக்குமார் (எ) சாம் (50) என்பவர் கம்பெனிகளே இல்லாமல் போலியாக கம்பெனிகள் இருப்பதாக சாம் எண்டர்பிரைசஸ், லேண்ட் ஸ்டார் மற்றும் செல்வி எண்டர்பிரைசஸ் ஆகிய கம்பெனிகள் உருவாக்கப்பட்டு, அதற்கு வங்கி கணக்குகள் ஆரம்பித்து அவற்றின் மூலம் காய், கனி விற்பனை மூலம் கிடைத்த பணம் என குறிப்பிட்டு குட்கா விற்பனை மூலம் பெற்ற பணத்தை தனது வங்கி கணக்குகளில் வரவு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தென் மாவட்டங்களில் பல இடங்களுக்கு தனது வேலையாட்கள் மூலம் பெருமளவில் குட்கா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து சாமுவேல் ஜெயக்குமார் (எ) சாமை கைது செய்வதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி உதவி காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படையினர் கடந்த சனிக்கிழமையன்று (24.09.2022) பெங்களூரு சென்று அவரது செல்போன் எண் மற்றும் அவரது கார் எண் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் பெங்களூருவில் ஒரு அபார்ட்மெண்டில் அவரது கார் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவரை கைது செய்வதற்கு வீட்டிற்கு சென்று முயன்றபோது அவர் கதவை திறக்கவில்லை, இதனையடுத்து கர்நாடகா போலீசாரின் உதவியோடு மேற்படி தனிப்படை போலீசார் பல்வேறு சிரமங்களுக்கிடையே மிகவும் சிரமப்பட்டு நேற்று (27.09.2022) நள்ளிரவில் அவரை கைது செய்து தூத்துக்குடி அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

அவரை விசாரணை செய்ததில் தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் தனது வேலையாட்கள் மூலம் சமீபத்தில் முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரூபாய் 3,70,000/- மதிப்புள்ள 950 கிலோ குட்கா மற்றும் கார், லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்த வழக்கு மற்றும் தூத்துக்குடி மதுவிலக்கு பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு கண்டெயினர் லாரியில் சட்ட விரோதமாக மதுபாட்டில் மற்றும் ரூபாய் 16 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு உட்பட தென் மாவட்டங்களில் 15, 20 நாட்களுக்கு ஒருமுறை பெருமளவு குட்கா விற்பனை செய்த பல வழக்குளிலும் இவர் மூளையாக செயல்பட்டு கோடி கணக்கில் பணம் சம்பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பெங்களூருவில் 10 வங்கிகளில் உள்ள இவரது கணக்குகளில் 16 லட்ச ரூபாய் முடக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர் போலியாக உருவாக்கப்பட்ட கம்பெனிகள் மூலம் காய், கனி வியாபாரம் செய்தது போல ஒரு கோடி ரூபாய்க்கு மேலாக ஜி.எஸ்.டி (GST Tax) வரி செலுத்தியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக இவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு மத்திய அரசு மற்றும் வருமான வரித்துறை ஆகியவற்றிற்கு  அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து பல்வேறு விசாரணைகள் நடைபெற்று வருகிறது. இதுவரை இவர் எந்த வழக்குகளிலும் கைது செய்யப்படவில்லை. தற்போது தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

கடந்த 5 தினங்களுக்கு மேலாக உதவி காவல் கண்காணிப்பாளர் மற்றும் அவரது தனிப்படையினர் பெங்களூருவில் தங்கி பல்வேறு சிரமத்திற்கிடையில் குட்கா மொத்த வியாபாரியான சாமுவேல் ஜெயக்குமார் (எ) சாமை கைது செய்த மேற்படி தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் வெகுவாக பாராட்டினார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post