நிலத்தை பதிவு செய்ய ஒரு லட்சம் லஞ்சம் : திருவெறும்பூர் சார் பதிவாளர் பாஸ்கரன் கைது - லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி.!

 

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம் காட்டூர் பாப்பா குறிச்சியில் வசித்து வரும் சுப்பிரமணியன் மகன் அசோக்குமார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் திருவெறும்பூர் வட்டம் பாப்பாக்குறிச்சியில் 21 சென்ட் விவசாய நிலத்தை வாங்க முடிவு செய்துள்ளார். அதன் பேரில் மேற்படி அசோக் திருவெறும்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நிலத்தை பத்திர பதிவு செய்ய அணுகியுள்ளார். 

தான் வாங்கவிருக்கும் விவசாய நிலத்திற்கு சந்தை மதிப்பாக ரூபாய் ஒரு லட்சம் நிர்ணயம் செய்து பத்திர பதிவு செய்ய திருவரம்பூர் சார்பதிவக சார் பதிவாளர் பாஸ்கரனை அணுகியுள்ளார். அதற்கு சார் பதிவாளர் பாஸ்கரன் மேற்படி நிலத்தினை அரசு மதிப்பீட்டின்படி சதுர அடி மதிப்பில் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்று கூறியுள்ளார். மேலும் விவசாய நிலமாக 47 (A) படி பத்திரம் பதிவு செய்ய வேண்டுமானால் தனக்கு ஒரு லட்ச ரூபாய் லஞ்சமாக கொடுத்தால் தான் விவசாய நிலமாக பதிவு செய்ய இயலும் என்றும் கூறியுள்ளார்.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அசோக்குமார், திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டனிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ஆலோசனை பேரில், இன்று சார்பதிவாளர் பாஸ்கரன், அசோக்குமாரிடமிருந்து ஒரு லட்சம் ரூபாயை லஞ்சமாக பெற்றபோது கையும் களவுமாக பிடிபட்ட அவரை கைது செய்த போலீசார், அவருக்கு சொந்தமான வீட்டிலும் சோதனை செய்தனர். இதனையடுத்து அவரிடம் மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post