கேரளாவில் வெளியாகி தமிழ்நாட்டிலும் சக்கை போடு போட்டுக் கொண்டு இருக்கிறது மஞ்சும்மல் பாய்ஸ் மலையாள படம். நட்பின் மகத்துவத்தை விளக்கும் இந்த படத்துக்கு மொழி தாண்டி தமிழ்நாட்டிலும் ஆதரவு அலை வீசுகிறது. இந்த நேரத்தில் தான் 'மஞ்சும்மல் பாய்ஸ் ' மூடில் தமிழ்நாட்டுக்கு சுற்றுலா வந்த இளைஞர்களை அடித்து மண்டை உடைத்து அனுப்பி இருக்கிறது ஒரு கும்பல்.
கேரளாவை சேர்ந்த 15 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மஞ்சும்மல் பாய்ஸ் படம் பார்த்த மாத்திரத்தில் தமிழ்நாட்டுக்கு சுற்றுலா செல்ல ஆசைப்பட்டு உள்ளனர். அவர்கள் ஒரு டூரிஸ்ட் வேனில் ஜாலியாக பாட்டு போட்டுக் கொண்டு ஆடிப்பாடி மகிழ்ச்சியுடன் சுற்றுலா வந்தனர்.
மிகவும் மகிழ்ச்சியாக கன்னியாகுமரி, நாகர்கோவில், மண்டைக்காடு, திற்பரப்பு அருவி, உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா சென்ற அவர்கள், இன்று இரவு நாகர்கோவில் பகுதியில் தங்களது சுற்றுலா வேனில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது நாகர்கோவில் பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் குடிபோதையில் காரில் வந்திருக்கிறார்கள். அவர்கள், கேரளாவை சேர்ந்த இளைஞர்கள் வந்த வேனில் பாட்டு சவுண்டு மிக அதிகமாக இருப்பதாக கூறி வேனை மறித்தனர். வேனை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதில் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு சண்டை முற்றியது. இந்த சண்டையில் இரு தரப்பினரும் மாறி மாறி அடித்துக் கொண்டனர். அந்த பகுதியே களேபரமானது.
இந்த சண்டையில் கேரளாவை சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கு மண்டை உடைக்கப்பட்டு ரத்தம் கொட்டியது.
தகவல் அறிந்து கோட்டார் போலீசார் வந்து மோதலில் ஈடுப்பட்ட நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தற்போது இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நட்புக்கு அடையாளமாக மஞ்சும்மல் பாய்ஸ் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் அதே நேரத்தில் மலையாளி பையன்கள் தாக்கப்பட்டு மண்டை உடைக்கப்பட்டு உள்ளதும் நடந்திருக்கிறது என்பது வேதனையான விஷயம் தான்.