சேலம் ரயில்வே கோட்டத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையின் 34-வது ஆண்டு விழா



சேலம் ரயில்வே கோட்டத்தில், ரயில்வே பாதுகாப்புப் படையின் 34-வது ஆண்டு விழா ரயில்வே கோட்ட மைதானத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் யு.சுப்பாராவ் தலைமை தாங்கி, ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.



 

பின்னர் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் மத்தியில் அவர் பேசியதாவது: ரயில்வே பாதுகாப்புப் படையினர் எவ்வித சவால்களையும் எதிர்கொண்டு சிறப்பாக செயல்படுவர் என்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் பயணிகளிடம் உள்ளது. நாடு முழுவதும் ரயில்வே துறைக்கு சொந்தமாக உள்ள சொத்துகளை பாதுகாப்பதுடன், ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பளிப்பது, ரயில்வே பாதுகாப்புப் படையின் முக்கிய பணியாக உள்ளது. ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பளிப்பது, ரயில்வே பாதுகாப்புப் படையின் முக்கிய கடமை என்று மத்திய ரயில்வே அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி, ரயில்வே பாதுகாப்புப் படையின் 40 சதவீத வீரர்கள், தினமும் 51 ரயில்களில் பயணிகளின் பாதுகாப்புக்காக பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். ரயில்களில், பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக, சக்தி படை எனும் பெண் காவலர்கள் பணிபுரிகின்றனர். 2018-ம் ஆண்டினை பெண்கள் பாதுகாப்புக்கான ஆண்டாக அறிவித்த சேலம் ரயில்வே கோட்டம், பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதுடன், இரவுநேர பயணங்களில் பெண்களுக்கான பாதுகாப்பினை உறுதி செய்துவருகிறது.
நடப்பு ஆண்டின் ஆகஸ்ட் வரையிலான காலத்தில், ரயில்வே பாதுகாப்புப் படையானது, ரூ.1.76 லட்சம் மதிப்பிலான, ரயில்வேயின் களவுபோன பொருட்களை மீட்டுள்ளது. இது தொடர்பாக 59 குற்றவாளிகளையும் கைது செய்ததுடன், ரயில்வே விதிகளை மீறிய குற்றத்துக்காக 4,126 பேரைப் பிடித்து, அவர்களிடம் ரூ.23,25,400 அபராதமாக வசூலித்துள்ளது.

 


 

பயணிகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிப்பதில், ரயில்வே போலீஸாருடன் இணைந்து, ரயில்வே பாதுகாப்புப் படை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, நடப்பு ஆண்டில் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் 60 வழக்குகளில் 92 குற்றவாளிகளைப் பிடித்து, அவர்களிடம் இருந்து, ரூ.4,48,000 மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள், காணாமல் போன அல்லது பயணிகளால் தவற விடப்பட்ட நகைகள், ரொக்கம் மற்றும் உடமைகளை மீட்டுக் கொடுப்பதிலும் சிறப்புடன் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஆண்டில், இதுபோன்று 82 சம்பவங்களில் பயணிகளால் தவறவிடப்பட்ட உடமைகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இ-டிக்கெட் விற்பனையில் முறைகேடு செய்பவர்களை கண்டுபிடிக்கும் வகையில், எடுக்கப்பட்ட நடவடிக்கையில், மோசடி நபர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டதுடன் ரூ.1,36,43 மதிப்புடைய 138 இ-டிக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. ரயில்கள் மூலமாக கடத்தப்படும் பொருட்கள், சட்டத்தை மீறி கொண்டு செல்லப்படும் பொருட்கள் ஆகியவற்றை கண்டுபிடிப்பதிலும் திறமையாக செயல்பட்டு வரும் ரயில்வே பாதுகாப்புப் படையானது, கடத்தல் மற்றும் சட்ட விரோதமாக கொண்டு செல்லப்பட்ட 12 சம்பவங்களில் ரூ.9,85,545 மதிப்புடைய சரக்குகளை பறிமுதல் செய்துள்ளது.



 

கோவை ரயில் நிலையத்தில், ரூ.39,50,000 செலவில், ஒருங்கிணைந்த பாதுகாப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்படுள்ளது. சேலம் ரயில்வே கோட்டத்தில் 5 ரயில் நிலையங்களில் நிர்பயா திட்டத்தின் கீழ் ரூ.3.50 கோடி செலவில் கண்காணிப்புக் கேமரா பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள், இயலாதவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கான தேவைகளை சேலம் ரயில்வே கோட்டம் மிகச்சிறப்பான நிறைவேற்றிக் கொடுத்து வருகிறது. வீடுகளில் இருந்து வெளியேறி வரும் குழந்தைகளை மீட்டு, பாதுகாப்பளிக்க சேலம், கோவை ரயில் நிலையகங்களில் குழந்தைகள் உதவி மையம் தொடங்கப்பட்டு, நடப்பு ஆகஸ்ட் வரையில் 335 குழந்தைகள் மீட்கப்பட்டனர். ட்விட்டர் மற்றும் பாதுகாப்பு உதவி எண்- 182 எண் மூலமாக, பயணிகளுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு தொடர்பான உதவிகளை அளிக்கப்படுகிறது. உதவி மைய எண் மூலமாக, 57 புகார்கள் பெறப்பட்டு, பயணிகளுக்கு உதவி வழங்கப்பட்டுள்ளது.

பயணத்தின்போது, ரயிலில் இருந்து தவறி விழுவதால் ஏற்படும் உயிரிழப்பு, உடல் உறுப்புகள் சேதமடைவது ஆகியவை குறித்து, ரயில்வே பாதுகாப்புப் படை, முக்கிய ரயில் நிலையங்கள் அனைத்திலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி, பயணிகளின் பாதுகாப்புக்கு உதவுகிறது. இதன் ஒரு பகுதியாக, ரயில் இருப்புப் பாதையை ஒட்டி அமைந்துள்ள கல்வி நிலையங்களிலும் ரயில் பாதையை கவனமாக கடப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

மேலும், ரயில்களில் படிகளில் பயணம் செய்பவர்களை தடுக்க, தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. நடப்பாண்டில், படியில் நின்று பயணம் செய்த குற்றத்துக்காக 161 பேர் பிடிக்கப்பட்டு அவர்களிடம் ரூ.80 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. தூய்மை இந்தியா திட்டத்திலும் ரயில்வே பாதுகாப்பு படை இணைந்து செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக,ரயில் நிலையங்கள், ரயில் பாதைகளில் அசுத்தம் செய்பவர்கள், எச்சில் துப்புபவர்களைப் பிடித்து, அந்த குற்றத்துக்காக 3,,912 பேரிடம் ரூ.10,44,700 அபராதம் வசூலித்துள்ளது. சேலம் கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படையினர், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க, நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகின்றனர்.


 


 

Previous Post Next Post