கோடீஸ்வரி கௌசல்யா ஒரே நாளில் முதல்வர் மற்றும் கமல்ஹாசனை சந்தித்தார்


கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் மதுரையை சேர்ந்த கௌசல்யா கார்த்திகா கலந்து கொண்டார். காது கேளாத, வாய் பேச முடியாத அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ராதிகா சரத்குமாரின் வாய் அசைவை வைத்து பதில் அளித்தார். ராதிகா கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்து கௌசல்யா ரூ. 1 கோடி வென்றார். இதையடுத்து அவர் தன் ஆசை ஒன்றை ராதிகாவிடம் கூற அவரும் நிறைவேற்றி வைத்துள்ளார்.



உலக நாயகன் கமல் ஹாஸனை சந்தித்து ஆசி பெற விரும்புவதாக கௌசல்யா ராதிகாவிடம் தெரிவித்தார். இதையடுத்து ராதிகா கௌசல்யா மற்றும் அவரின் குடும்பத்தாரை கமல் ஹாஸனை சந்திக்க வைத்தார். கமல் கௌசல்யாவை வாழ்த்தினார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.




மாற்றுத் திறனாளியாக இருந்தாலும் நம்பிக்கையுடன் பிற பெண்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் கௌசல்யாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் வாழ்த்தியுள்ளார். முதல்வர் வாழ்த்தியபோது எடுக்கப்பட்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது. அதை பார்த்த நெட்டிசன்கள் நீங்க நல்லா இருக்கணும் கௌசி என்று வாழ்த்தியுள்ளனர்.



கோடீஸ்வரி போன்ற கேம் ஷோவில் ஒரு மாற்றுத்திறனாளி ரூ. 1 கோடி வென்றது இதுவே முதல் முறை ஆகும். அத்தகைய உலக சாதனை படைத்துள்ள கௌசல்யாவுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகிறது. பரிசுத் தொகையில் ஒரு பகுதியை தான் படித்த மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பள்ளிக்கு கொடுக்கப் போவதாக கௌசல்யா தெரிவித்துள்ளார். மேலும் தனது குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு சுவிட்சர்லாந்து செல்லப் போகிறாராம் கௌசல்யா.




Previous Post Next Post