தமிழகத்தில் இன்றைய கொரோனா தொற்று நிலவரங்களை சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்
அவர் கூறியதாவது:
தமிழகத்தில் இன்று 106 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1075 ஆனது. மேலும் ஒரு உயிரிழப்புடன் சேர்த்து இறந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
4 அரசு மருத்துவர்கள் மற்றும் 4 தனியார் மருத்துவர்கள் என 8 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை செய்தாலும் செலவை அரசே ஏற்கும்.
கொரோனா வார்டுகளிலும் சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு தனி அறைகள் வழங்கப்பட்டு உள்ளது. மற்றவர்களுக்கு 10 அடி இடைவெளி விட்டு தான் படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
ஒரே குடும்பத்தில் தொற்று பாதிக்கப்பட்டவரும், தொற்று இல்லாதவரும் இருக்கிறார்கள். எனவே அவர்களை தனித்தனியே பராமரிக்கிறோம்.
தடுப்பூசி குறித்தும் ஒரு ஆய்வு செய்து கொண்டு இருக்கிறோம். சுகாதார பணியாளர்கள் தங்கள் உயிரை பனயம் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல உணவு அளிக்கப்பட்டு வருகிறது.