விவசாயிகளுக்கு பயன் தராத வேளாண் சட்டங்களை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும்: நாராயணசாமி பேட்டி

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- 


மத்திய அரசு வேளாண் பாதுகாப்பதாக கூறி 2 சட்ட மசோதாக்களை கொண்டு வந்து உள்ளது. இந்த சட்டங்கள்  விவசாயிகளுக்கு பயன் அளிக்க கூடிய வகையில் இல்லை. இந்த சட்டங்கள் இடைத்தரகர்களுக்கும்  பெரிய முதலாளிகள், பெரிய வியாபாரிகளுக்கும் பாதுகாப்பாக இருக்கிறது.



இடைத்தரகர்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவாக சட்டத்தை கொண்டு வந்தால் சட்டத்தை மாற்றுவதாக பிரதமர் மோடி கூறுவது உண்மையல்ல. சட்டத்தை பார்க்கும் போது எல்லாமே வியாபார மையமாக உள்ளது.


விவசாயிகளை பாதுகாப்பாக காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. விலையை விவசாயிகள் தான் நிர்ணயிக்க வேண்டும். இடைத்தரகர்களோ வியாபாரிகளோ நிர்ணயிக்க முடியாது. இதை மாற்றி அமைக்க தான் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.


ஆனால் பெரிய அளவில் மார்க்கெட்டிங், பெரிய முதலாளிகளுக்கு பாதுகாப்பாக  சட்டம் உள்ளதால் தான் எதிர்கட்சிகள் எதிர்க்கின்றன. இந்த சட்டத்தை எதிர்த்து பாரதீய ஜனதா கூட்டணியில் உள்ள அகாலிதளம் மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்து இருப்பதை பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும்.


பஞ்சாப், அரியானா மாநிலங்களில் சிறப்பாக விவசாயம் செய்யக்கூடிய பகுதிகள். இதனால் காங்கிரஸ், அகாலிதளம் எதிர்க்கிறது. வேளாண் சட்ட விவகாரத்தில் மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.


நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசின் பாடத்திட்டத்தில் தேர்வு நடக்கிறது. ஆனால் மாநிலங்களில் மாநில அரசின் பாடத்திட்டத்தில் படிக்கின்றனர். தமிழகத்தில் 12 மாணவர்கள் நீட் தேர்வு பயத்தில் தற்கொலை செய்து உள்ளனர். இதற்கு மத்திய பா.ஜ.க. அரசு தான் பொறுப்பு. இதை புரிந்துக் கொள்ளாமல் நீதிமன்றத்தை காட்டுகின்றனர். நீதிமன்றத்தில் மத்திய அரசு  சொல்வதை தான் சொல்வதால் அதை காரணம் காட்டுவது அர்த்தம் அற்றது.  நீட் தேர்வை எந்த மாநிலம் விரும்புகிறதோ அங்கு தேர்வு நடத்தலாம். எந்த மாநிலம் விரும்பவில்லையோ அங்கு விட்டு விடலாம். புதுச்சேரி மாநிலத்தில் நீட் தேர்வு இல்லாமல் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவ-மாணவிகள் சேர்க்கப்பட்டனர். இதனால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட என அனைத்து தரப்பினருக்கும் இடம் கிடைத்தது. நகரப்புறம் மட்டுமின்றி கிராமப்புற மாணவர்களுக்கும் இடம் கிடைத்தது. நீட் தேர்வுக்காக எந்த மாணவர்கள் தனியார் பள்ளியில் படிப்பதால் நகர்ப்புற பகுதியில் உள்ளவர்கள் தான் கிடைக்கிறது. கிராமப்புற மாணவர்களுக்கு கிடைக்காததால் தான் எதிர்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


Previous Post Next Post