அதிமுக வழிகாட்டுதல் குழுவில் தலித், மகளிர், சிறுபான்மையினர் புறக்கணிப்பு... அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி  கண்டனம்




 

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அதிமுக வழிகாட்டுதல் குழுவில் தலித், மகளிர், சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியாக உள்ளது என்று அகில இந்திய ஜனநாயக மக்கள்  கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் பொன் குணசீலன் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 

ஓடுக்கப்பட்டோர், சிறுபான்மையினர், நலிந்தோர், ஆதரவற்றோர், மகளிர் நலமும் வளமும் பெற அதிமுகவை மறைந்த முதல்வர் எம்ஜிஆர் உருவாக்கினார். அவரது வழியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் சீரிய முறையில், மேற்கண்டோர் நலம் பெற உறுதுணையாக இருந்தார்.

 

இருவரும் அதிமுகவிலும், அரசிலும் மேற்கண்ட பிரிவினர்  சலுகைகள் பெற வழிவகை செய்தனர். ஆனால், இப்போது அதிமுகவுக்கு ஆதரவாக இருந்த மேற்கண்ட சமூகங்களைச் சேர்ந்தோர் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப் பட்டுள்ளது வேதனையாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது.

 

தலித், பெண் சமுதாயத்தின் பிரதிநிதியாக சத்தியவாணி முத்து அம்மையாரும் பெருமளவு உயர் பதவியை எம்ஜிஆர் வழங்கினார். இதையடுத்து,  டாக்டர் வேணுகோபால், தலித் எழில்மலை,  கருப்பசாமி போன்ற பலரையும் அதிமுகவிலும், ஆட்சியிலும் முக்கியத்துவத்தை ஜெயலலிதா அளித்தார்.

 

இதேபோல், எம்எல்ஏக்களை பதவிப் பிரமாணம் செய்துவைக்கும் வகையில் எங்கள் கட்சித் தலைவர் மரியாதைக்குரிய டாக்டர் செ.கு.தமிழரசன் அவர்களை தற்காலிக சபாநாயகராக அமர்த்தி, தலித் மக்களுக்கு உரிய அங்கீகாரத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.ஆனால், இன்று தலித் மக்கள் மட்டுமல்லாது, ஒடுக்கப்பட்ட மக்கள் பலரும் அதிமுகவில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

 

அதிமுக உருவாக்கியுள்ள வழிகாட்டுதல் குழுவில் சமூக நீதி இல்லை. சமூக நீதி காத்த வீராங்கனை ஜெயலலிதா என்று புகழ்பாடுவதில் என்ன நியாயம் இருக்கிறது.

11 பேர் கொண்ட குழுவில் முக்குலத்தோர் பிரதிநிதிகளாக திண்டுக்கல் சி. சீனிவாசன், காமராஜ்,  கொங்கு வேளாள கவுண்டர்கள் சார்பாக பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி,

வன்னியர் பிரதிநிதியாக சி.வி. சண்முகம், மீனவர் சமூகத்துக்கு டி.ஜெயக்குமார், நாயுடு (கிறிஸ்தவ) சமூகத்துக்கு ஜே.சி.டி.பிரபாகரன், முதலியார் சமூகத்துக்கு விழுப்புரம் மோகன், நாடார் சமூகத்துக்கு மனோஜ் பாண்டியன், தேவேந்திர குலவேளாளர் சார்பாக சோழவந்தான் மாணிக்கம் என அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

 

தலித்துகளுக்கு இடம் இல்லை?  தலித்துகளுக்கான பிரதிநிதி யார்? அதிமுக என்ன ஆதிக்கசாதிகளின் கட்சியா?  பெண்கள் ஒருவரை கூட நியமிக்கலையே..

 எம்ஜிஆருக்குப் பிறகு இந்த கட்சியை கட்டி காப்பாத்தி சிந்தாம சிதறாம ஒப்படைச்சவரு ஜெயலலிதா.. அவரோட கட்சியில் ஒரே ஒரு பெண்ணுக்கு கூடவா வழிகாட்டுதல் குழுவில் இடம்கிடைக்க தகுதி இல்லாம போச்சா? அதேபோல் இஸ்லாமியருக்கான பிரதிநிதித்துவம் இல்லையே ஏன்?  இதைல்லாம் ரொம்ப தவறான நடவடிக்கையாகும். ஆகவே,  அனைத்து ஜாதி, மத பிரிவினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் கூடுதல் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும்.என்று அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் பொன் குணசீலன் அவர்கள் 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Previous Post Next Post