தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களுக்குள் காணாமல் போன 353 செல்போன்கள் மீட்பு - மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் தகவல்.!


தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக உள்ள புகார்களின் பேரில் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு 70 செல்போன்கள் மீட்கப்பட்டு அதன் உரிமையாளரிடம் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் ஒப்படைத்தார்

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  இளங்கோவன் தலைமையில் 

தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர்  சிவசங்கரன் தலைமையிலான போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து விரைந்து நடவடிக்கை எடுத்து செல்போன்களை மீட்க உத்தரவிட்டார்.

அதன்படி மேற்படி சைபர் குற்றப்பிரிவு தனிப்படையினர் செல்போன்கள் எங்கெங்கு உள்ளன என்பதை அதன் ஐ.எம்.இ.ஐ (E.M.E.I) எண்ணை வைத்து கண்டு பிடித்து, சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தெரிவித்து அவற்றை பறிமுதல் செய்து 

ஏற்கனவே கடந்த 15.10.2020 அன்று 102 செல்போன்களும், 09.12.2020 அன்று 60 செல்போன்களும், 12.02.2021 அன்று 61 செல்போன்களும், 02.07.2021 அன்று 60 செல்போன்களும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளார்.

அதன்பிறகும் தொடர்ந்த சைபர் கிரைம் குற்ற பிரிவு தனிப்டையினர் இதனை கண்காணித்து துரிதமாக செயல்பட்டு ரூபாய் 7 லட்சம் மதிப்புள்ள 70 செல்போன்களை அதன் ஐ.எம்.இ.ஐ (E.M.E.I) எண்ணை வைத்து கண்டு பிடித்து, அவைகளை பறிமுதல் செய்து,  அதன் உரிமையாளர்களிடம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஒப்படைத்தார்.

தொடர்ந்து மாவட்ட எஸ்.பி பேசுகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களாக காணமால்போன பொதுமக்களின் செல்போன்களை சைபர் குற்ற பிரிவு போலீசார் 5வது கட்டமாக கண்டுபிடித்து உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.  இதுவரை மொத்தம் 353 தொலைந்த செல்போன்களை கண்டுபிடித்து கொடுத்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஒரு ஆய்வாளர், 2 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் அடங்கிய சைபர் கிரைம் பிரிவு கடந்த சில மாத காலமாக மாவட்ட காவல் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.  

சைபர் கிரைம் எனப்படும் கணினி வழி குற்றங்கள் மற்றும் தொலைந்த  செல்போன்களை பற்றி புகார் அளிக்க காவல் நிலையம் மட்டுமல்ல, மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இயங்கி வரும் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்திலும் நேரடியாக புகார் அளிக்கலாம்.  

சமூக வலைதளங்களில் நடைபெறும் குற்றங்களான ஏடிஎம் கார்டு  எண் கேட்டு வரும் போலியான தொலைபேசி செய்தியை நம்பி பணத்தை இழந்தவர்கள், சமூக ஊடகங்கங்களில் அவதூறான செய்திகள் பரப்புபவர்கள் மீது புகார் அளிக்கவும், இணையதளம் மூலமாக வேலை வாங்கி தருவதாக ஏமாற்றுபவர்கள் மீதும் இக்காவல்நிலையத்தில் புகார் அளிக்கலாம். 

பெண்கள் சமூக வலைதளங்களில் தங்களது சுயவிவரங்கள், புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்வதன் மூலம் நடைபெறும் குற்றங்களுக்கு இங்கு புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் சமூக வளைதளங்களை பயன்படுத்துவதில் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். 

சமூக வலைதளங்கள் சம்மந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் மோசடிகள் நடைபெற்றால் உடனடியாக பொதுமக்கள் 155260 என்ற சைபர் குற்றப்பிரிவு கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார் 

நிகழ்ச்சியில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபி, தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உட்பட காவல்துறை அதிகாரிகள், காவல் ஆளினர்கள் மற்றும் செல்போன் உரிமையாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post