கொரோனா 3 வது அலை பரவலின் தீவிரம் என்னவென்று மக்கள் உணருவதற்குள் அதன் எண்ணிக்கை ‘கிர்’ரென்று உயர்ந்து வருகிறது. நேற்று 6939 ஆக இருந்த புதிய தொற்றுக்கள் எண்ணிக்கை இன்று 8,944 ஆக உயர்ந்துள்ளது. ரயில் நிலையங்கள், ஏர்போர்ட் உள்ளிட்ட இடங்களில் கண்காணிக்கப்பட்டு, கண்டறியப்பட்ட வெளி மாநில எண்ணிக்கையுடன் சேர்த்து புதிய பாதிப்பு எண்ணிக்கை 8,981 ஆக உள்ளது.
அதாவது இன்று ஒரே நாளில் மட்டும் 8,944 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. 1 லட்சத்து 36 ஆயிரத்து 292 பேரிடம் மாதிரிகளை சோதனை செய்ததில் 8,944 பேர் தொற்றுக்குள்ளாகியது தெரிய வந்துள்ளது. தமிழ்நாடு முழுவதுமாக இன்று மட்டும் 8 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
அதிகபட்சமாக சென்னையில் 4,531 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,039 பேருக்கும, கோவையில் 408 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அனைத்து மாவட்டங்களிலுமே தொற்று பரவல் தீவிரமாக அதிகரித்து வருகிறது.
ஒமைக்ரான் தொற்றை பொருத்தவரை 13 மாவட்டங்களில் 117 பேர் இதுவரை (மொத்த எண்ணிக்கை) ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ஊரடங்கு வந்து கொரோனா பரவலின் தீவிரம் அறிவதற்குள் நோய்ப்பரவல் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்து வருகிறது. மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.