முழு ஊரடங்கு: திருப்பூர் ரயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்கள் தவிப்பு

 வெளிமாநிலங்களில் இருந்து வந்த வடமாநிலத் தொழிலாளர்கள் வாகன வசதி இல்லாததால் திருப்பூர் ரயில் நிலையத்தில் உணவு ஏதுமின்றி அவதிப்படுகிறார்கள். 


பனியன் தொழில் நகரான திருப்பூரில் சுமார் 4 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். பிகார், ஒடிஸா, ஜார்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ரயில் மூலமாக திருப்பூர் வருகின்றனர்.


 இந்தத் தொழிலாளர்கள் அனைவரும் திருப்பூர் ரயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனைக்குப் பின்னர் திருப்பூருக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். ஊரடங்கு அச்சம் காரணமாக ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பி செல்கின்றனர். 
அதேவேளையில், வேலை தேடி திருப்பூர் வருபவர்களும் தினமும் ஆயிரக்கணக்கில் வருகிறார்கள். அவ்வாறு வரும் பயணிகள் நேற்று  இரவு முதல் பேருந்து வசதிகள் இல்லாததால் ரயில் நிலையத்தின் முன்புறம் குடும்பத்துடன் தங்கியுள்ளனர்.


 சிலர் அங்கேயே சமைத்துப் சாப்பிடுகின்றனர். சிலர் உணவு இல்லாமல் உட்கார்ந்திருக்கின்றனர்.  பெண்கள், குழந்தைகளை வைத்துக் கொண்டு வெட்டவெளியில் அமர்ந்திருக்கிறார்கள். அதே போல, ஊரடங்கு அச்சம் காரணமாக வெளி மாநிலங்களுக்குச் செல்லும் பயணிகளும் திருப்பூர் ரயில் நிலையத்தில் அதிக அளவில் குவிந்துள்ளனர். 



இதன் காரணமாக திருப்பூர் ரயில் நிலையம் வட மாநில தொழிலாளர்களால் நிரம்பி வழிகின்றது. முழு ஊரடங்கு என்ற நிலையில் தாங்கள் வேலை செய்யும் பனியன் நிறுவனங்களுக்கு செல்ல இயலாமல் ரயில் நிலையத்தில் முடங்கி உள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

Previous Post Next Post