திருப்பூரில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி எத்திலின் மூலம் பழுக்க வைத்த 2.5 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் தற்போது மாம்பழ சீசன் துவங்கியுள்ள சூழலில் அனைத்து பல கடைகளிலும் மாம்பழங்கள் குவியத் தொடங்கியுள்ளது. சேலத்து மாம்பழம், மல்கோவா மாம்பழம், கிளி மூக்கு மாங்காய் என பல ரகங்களில் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கடைகளில் கெமிக்கல் மூலம் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை தலைமையில் அதிகாரிகள் திருப்பூர் அரிசி கடை வீதி மற்றும் மார்க்கெட் பகுதிகளில் உள்ள மாம்பழ கடைகள் மற்றும் குடோன்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் நான்கு கடைகளில் சுமார் 2.5 டன் மதிப்பிலான மாம்பழங்கள் எத்திலின் மூலம் பழுக்க வைத்தது தெரியவந்தது இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி எச்சரிக்கை விடுத்தனர்.