அலகுமலையில் கந்தசஷ்டி விழா தொடக்கம்

திருப்பூர் மாவட்டம், அலகுமலையில் உள்ளா அருள்மிகு முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் பிரசித்திபெற்றது. இங்கு ஆண்டுதோறும் ஸ்ரீகந்த சஷ்டி திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். 


கந்த சஷ்டி விழாவின் முதல் நாளான இன்று (25.10.2022, செவ்வாய்க்கிழமை) கணபதி ஹோமத்துடன் பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கோவில் திருப்பணிக்குழுத் தலைவர் சின்னுக்கவுண்டர் முன்னிலையில் கோபூஜை நடைபெற்றது. வள்ளி, தெய்வானை சமேத உற்சவருக்கும், வேலுக்கும் சிறப்பு அபிஷேகம் & அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இன்றைய தினத்தின் முக்கிய நிகழ்வான முருகப்பெருமானுக்கு திருக்காப்பு அணிவிக்கப்பட்டது. 

தொடர்ந்து கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு கங்கணம் அணிவித்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது. சுமார் 1500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் & குழந்தைகள் சஷ்டி விரதத்தை துவக்கினர். பின்னர் அலகுமலை, மூலவரான முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு மரிக்கொழுந்து பச்சை மாலை அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. அடிவார மண்டபத்தில் ஸ்ரீசரன் அகாடமி ஆஃப் பைன் ஆர்ட்ஸ் சார்ப்பில் கந்தன் கருணை எனும் தலைப்பில் மாணவியர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. சஷ்டி விழாவுக்கான ஏற்பாடுகளை கந்தசஷ்டி விழாக்குழு & திருக்கோவில் ஆன்மிகப் பேரவையினர் செய்து வருகின்றனர். 

இன்று சூரியகிரகணத்தை முன்னிட்டு மதிய உச்சிக்கால பூஜையுடன் திருக்கோவில் நடை சாத்தப்படும். பின்னர் மாலை 7 மணிக்கு நடைதிறக்கப்பட்டு வழக்கம்போல பூஜைகள் நடைபெறும் என திருக்கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
Previous Post Next Post