தூத்துக்குடி : வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக SMS அனுப்பி இருவரிடம் மோசடி செய்யப்பட்ட ரூ. 3,20,000/- பணம் மீட்பு.!

தூத்துக்குடியில் வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளது மற்றும் அமேசான் பரிசு பொருள் விழுந்துள்ளது  என்று குறுஞ்செய்தி மூலம் லிங்க் அனுப்பி இருவரிடம் மோசடி செய்யப்பட்ட ரூ. 3,20,000/- பணத்தை  சைபர் குற்ற பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து மீட்டனர். 

இதுபோன்று SMS மற்றும் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு முகம் தெரியாத நபர் அனுப்பும் link ஐ click செய்வதை தவிர்த்து சைபர் குற்ற மோசடியிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பொதுமக்களுக்கு வேண்டுகோள்.

தூத்துக்குடி முத்தையாபுரம் குமாரசாமி நகைரச் சேர்ந்த தங்கபாண்டியன் மகன் ஜோன்ஸ் என்பவருக்கு அவருடைய வங்கி கணக்கு முடக்கம் செய்யப்ட்டுள்ளதாகவும், அதை சரிசெய்ய KYC Update  செய்ய வேண்டும் என்று கூறி அவருடைய செல்போனுக்கு லிங்க்குடன் குறுஞ்செய்தி வந்துள்ளது. அந்த லிங்க்-ஐ கிளிக் செய்து ஜோன்ஸ் தன்னுடைய இன்டெர்நெட் பேங்கிங் பயனாளர் பெயர் (Username), கடவுச்சொல் (Password) மற்றும் OTP ஆகியவற்றை பதிவு செய்துள்ளார். இதனையடுத்து அவருடைய வங்கிகணக்கில் இருந்து ரூ.1,24,500/- பணம் மோசடியாக எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜோன்ஸ் National cybercrime Portal என்ற சைபர் கிரைம் இணைய தள முகவரியில் புகார் பதிவு செய்துள்ளார்.

அதே போன்று தூத்துக்குடியைச் சேர்ந்த மற்றொருவருக்கு அமேசானில் பரிசு பொருள் விழுந்துள்ளதாக அடையாளம் தெரியாத நபர் தொலைபேசியில் தொடர்புகொண்டு அந்த பரிசை பெறுவதற்கு ரூ. 25,000/- பணம் செலுத்த வேண்டும் என்று கூறி credit card  மூலம் பணம் செலுத்த ஒரு லிங்கை அனுப்பியுள்ளார். அந்த லிங்கை கிளிக் செய்து அவர் தனது credit card  எண்ணையும் OTP யையும் கொடுத்துள்ளார். இதனையடுத்து அவருடைய credit card ல் இருந்து ரூ. 4,38,238/- பணம் மோசடியாக  எடுக்கப்பட்டது. இதுகுறித்து அவரும்  National cybercrime Portal  என்ற சைபர் கிரைம் இணைய தள முகவரியில் புகார் பதிவு செய்துள்ளார்.

மேற்படி பாதிக்கப்பட்ட இருவர் அளித்த புகார்களின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. லயோலா இக்னேஷியஸ் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மேற்படி வழக்கில் ஜோன்ஸ் என்பவர் இழந்த பணம் அவருடைய வங்கி மூலம் Flipkart இணையதளத்தில் பொருட்கள் கொள்முதல் செய்திருப்பது கண்டறியப்பட்டு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இருந்து Flipkart நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டதின் அடிப்படையில் Flipkart மூலம் Order செய்யப்பட்ட பொருட்கள் ரத்து செய்யப்பட்டு ஜோன்ஸ் என்பவரது ரூ. 99,500/- பணம் பெறப்பட்டது.

அதே போன்று மற்றொரு வழக்கில் மனுதாரர் இழந்த பணம் அவருடைய credit card மூலம் Amazon இணையதளத்தில் பொருட்கள் கொள்முதல் செய்திருப்பது கண்டறியப்பட்டு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இருந்து Amazon  நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டதின் அடிப்படையில் Amazon மூலம் Order செய்யப்பட்ட பொருட்கள் ரத்து செய்யப்பட்டு மனுதாரருடைய ரூ. 2,20,295/- பணம் பெறப்பட்டது.

மேற்படி 2 வழக்குகளில் மீட்கப்பட்ட பணத்தை மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து இன்று (08.11.2022) உரியவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ஒப்படைத்தார்.

மேற்படி சைபர் குற்ற மோசடி வழக்குகளில் துரிதமாக செயல்பட்டு பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்ட சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேஷியஸ் தலைமையிலான தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பாராட்டினார்.

மேலும் இதுபோன்று SMS மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் தொடர்புகொண்டு முகம் தெரியாத நபர் அனுப்பும் Link ஐ Click செய்ய வேண்டாம். மேலும் வங்கி அலுவலர் போல் பேசி யார் OTP கேட்டாலும் அதை யாரிடமும் பகிர வேண்டாம் என்றும் சைபர் குற்ற மோசடியாளர்களமிருந்து பொதுமக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post