இந்தியாவின் ஏற்றுமதி 12.2 சதவீதம் சரிவு.! -வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பு.!

 

டிசம்பர் மாதத்துக்கான ஏற்றுமதி விவரங்களை ஒன்றிய அரசு நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த டிசம்பர் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 12% சரிந்து 34.48 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலோ இந்தியாவின் ஏற்றுமதி 39.27 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

முந்தைய நவம்பர் மாதத்தில் இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி 31.99 பில்லியன் டாலராக இருந்துள்ளது. டிசம்பர் மாதத்தில் வர்த்தக பற்றாக்குறை 23.76 பில்லியன் டாலராக இருக்கிறது. வர்த்தக பற்றாக்குறை என்பது இறக்குமதிக்கும், ஏற்றுமதிக்கும் இடையேயான வேறுபாடு ஆகும். 

டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் இறக்குமதியும் லேசாக சரிந்துள்ளது. டிசம்பர் மாதத்தில் இறக்குமதி 3.5% சரிந்து 58.24 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியாவின் இறக்குமதி 60.33 பில்லியன் டாலராக இருந்தது. 

இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி 2021-22ஆம் நிதியாண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 422 பில்லியன் டாலர் உச்சத்தை தொட்டுள்ளது. ஆனால், மேற்குலக நாடுகளில் பொருளாதார மந்தநிலை போன்ற பிரச்சினைகளால் 2023ஆம் ஆண்டில் இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சர்வதேச அரசியல் சூழல், டிமாண்ட் குறைவு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, கண்டய்னர் கையிருப்பு குறைவு என ஏற்றுமதிக்கு பாதகமான பல்வேறு பிரச்சினைகளை தற்போது உலக வர்த்தகம் சந்தித்து வருகிறது. இதுமட்டுமல்லாமல் சீனா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா பரவி வருகிறது. 

தற்போதைய உலக அரசியல் சூழலை கருத்தில் கொண்டு, 2023ஆம் ஆண்டில் உலக வர்த்தகம் 1% மட்டுமே வளரும் என உலக வர்த்தக அமைப்பு (WTO) கணித்துள்ளது. 

செய்தியாளர்களிடம் பேசிய வர்த்தகத்துறை செயலாளர் சுனில் பார்த்வால், வெளிநாட்டில் தேவை குறைந்து வருவதால் இந்தியாவின் ஏற்றுமதிகள் குறைந்து விட்டதாக தெரிவித்தார். “உலகளவில் மந்தநிலைப் போக்குகள் உள்ளன. அதனால், பலத்த பாதிப்பை சந்தித்து வருகிறோம்,'' என்றார். 

மேலும் பார்த்வால் கூறுகையில், ஏற்றுமதியை அதிகரிக்க, நாடு வாரியாக மற்றும் பொருட்கள் வாரியாக ஒரு விரிவான பகுப்பாய்வை அமைச்சகம் மேற்கொள்கிறது என்றார்.






Ahamed

Senior Journalist

Previous Post Next Post