"நாளை புதன் கிழமை (ஜனவரி 18) பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்" - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்.!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு பிறகு நாளை பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு தற்போது பொங்கல் பண்டிகை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் 17 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. ஜனவரி 14 போகிப் பண்டிகை, ஜனவரி 15 பொங்கல் பண்டிகை , 16 ஆம் தேதி மாட்டுப் பொங்கல், 17 ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

பொங்கல் பண்டிகை கொண்டாட ஏராளமான மக்கள் சொந்த ஊர் சென்றுள்ளதால் பள்ளிகளுக்கான விடுமுறையை நீட்டிக்க கோரிக்கை எழுந்தது. மேலும், ஜனவரி 18 ஆம் தேதி தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்து உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.

இதற்கிடையே, இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "பொங்கல் விடுமுறைக்கு பிறகு புதன் கிழமை (ஜனவரி 18) பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்" என்று தெரிவித்தார்.

நாளையும் விடுமுறை கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த மாணவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post