முறைகேடாக 200 குடிநீர் இணைப்புகள்...எம்.எல்.ஏ., பெயரை சொல்லி மிரட்டல்... திமுக பகுதி செயலாளர் மீது முஸ்லிம் லீக் நிர்வாகி புகார்

 திருப்பூர் மாநகராட்சி 45 வது வார்டில் மக்கள் பணிகளை செய்ய விடாமல் எம்.எல்.ஏ., பெயரை சொல்லி திமுக பகுதி செயலாளர் மிரட்டுவதாகவும், வார்டில் 200 குடிநீர் இணைப்புகளை முறைகேடாக வழங்கி உள்ளதாகவும் திமுகவின் கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாவட்ட தலைவர் சையது முஸ்தபா புகார் தெரிவித்துள்ளார். 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட தலைவரும், திருப்பூர் மாநகராட்சி  45 வது வார்டு கவுன்சிலருமான பாத்திமா தஸ்ரினின் தந்தையுமான  சையது முஸ்தபா இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். 

அவர் கூறியதாவது: 45 வது வார்டில் திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கினார்கள். அனைத்து கட்சிகளும் முழு மனதோடு வெற்றி பெறச்செய்தார்கள். அதன் பிறகு திமுகவின் பகுதி செயலாளர் உசேன், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுக்கிறார். திமுக எம்.எல்.ஏ., அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி அரசு அலுவலர்களை மிரட்டுகிறார். இவ்வாறு 10 முதல் 15 நாட்கள் தாமதம் செய்த பின்னர், அவரே அந்த பணியை செய்வது போல காட்டிக் கொண்டு, முஸ்லீம்  லீக் கவுன்சிலர் செய்யாதது போல காட்டிக் கொள்கிறார்கள். இதுவரைக்கும் 10 அதிகாரிகளை இந்த ஒன்றரை வருட காலத்தில் மாற்றி இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் 200 இடங்களில் முறைகேடாக குடிநீர் குழாயை போட்டு இருக்கிறார்கள். இதனால் அரசுக்கு வர வேண்டிய வருமானம் இழப்பு ஏற்படுகிறது. மாமன்ற உறுப்பினர் பாத்திமா தஸ்ரின் மாமன்ற கூட்டத்தில் இது பற்றி சொன்னாலும், அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்பதால் அதை மறைக்கிறார்கள். முறைகேடான பைப் கனெக்சன் பிரச்சினைகளுக்கு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க இருக்கிறோம். முறைகேடாக போடப்பட்ட பைப் இணைப்புகளை உடனடியாக முறைப்படுத்த வேண்டும். அந்த பகுதி பைப் இணைப்புகளை துண்டிக்காமல், அதற்கான நெறி முறையை பின்பற்றி முறைப்படுத்த வேண்டும். மக்கள் பணம் கொடுத்தது உண்மை. எம்.எல்.ஏ., வார்டுக்குள் எந்த பணியையும் செய்து விடக் கூடாது என்று உசேன் தடுக்கிறார். எனது வீட்டுக்கு எதிரில் ஆக்கிரமிப்பை எடுக்கவில்லை. 45 ஆவது வார்டில் சாக்கடை கால்வாய் கட்டுவதில்லை. 20 ஆண்டுகளாக மோசமாக இருக்கிறது. மேயரிடம் முறையிட்டாலும், எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளராக இருப்பதால் அவரை பகைத்துக் கொள்ளக் கூடாது என அதிகாரிகள் நினைக்கிறார்கள். இதனால் பணிகளை செய்ய மறுக்கிறார்கள். வார்டில் சாக்கடை கால்வாய் கட்டியே ஆக வேண்டும். வார்டில் 20 சதவீதம் தான் குப்பை அள்ளுகிறார்கள். ஆக்கிரமிப்புகள் அதிகம் இருக்கிறது. பணிகளை எம்.எல்.ஏ., பெயரை சொல்லி தடுக்கிறார்கள். முஸ்லிம் லீக்கிற்கு அரசியல் தொழில் கிடையாது. எங்கள் பகுதி மக்களுக்கு பணிகளில் எந்தவித தொய்வும் ஏற்படக் கூடாது. திமுக பகுதி செயலாளர் எம்.எல்.ஏ.,வை பின்புலமாக வைத்து மக்களையும், அதிகாரிகளையும் மிரட்டுகிறார். இதே நிலை தொடர்ந்தால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றார்.

 பேட்டியின் போது  மாவட்ட செயலாளர் சையது இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் லுக்மான் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Previous Post Next Post