நத்தம் அருகே தனியார் கல்குவாரி பள்ளத்தில் குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி







நத்தம் அருகே தனியார் கல்குவாரி பள்ளத்தில் குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி



 

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ளது பன்னியாமலை. இதே ஊரைச் சேர்ந்த கதிர்வேல் குமார் மகன் சிவா(8), இவரது தம்பி அழகுராஜாவின் மகள் மோனிகா(9). இவர்களுடன் சேர்ந்த அதே ஊரைச் சேர்ந்த தர்ஷிணி, சபரி, லாவண்யா ஆகியோர் நேற்று பிற்பகலில் பள்ளி விடுமுறை காரணமாக அந்த பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் உள்ள சுமார் 30 அடி பள்ளத்தில் கிடந்த தண்ணீரில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது சிவாவும், மோனிகாவும் தண்ணீருக்குள் இறங்கி குளித்துக் கொண்டிருந்த போது  முழ்கியதை கண்ட மற்ற சிறுவர்கள் ஊருக்குள் ஓடி வந்து அங்குள்ளவர்களிடம் சம்பவம் பற்றி கூறியுள்ளனர்.

 


 

உடனே அங்கு சென்ற கிராம மக்கள் தண்ணீர் மூழ்கிய மோனிகா இறந்த நிலையில் அவரது உடலை மீட்டு சிவா உடலை தேடி வந்தனர். மேலும் இது குறித்து நத்தம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து அங்கு வந்த 6 பேர் கொண்ட வீரர்கள் குழுவும் சேர்ந்து சிவாவின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் எம்எல்ஏ ஆண்டிஅம்பலம் அங்கு சென்று பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். அப்போது அங்கு தாசில்தார் ராதாகிருஷ்ணன், கிராம அலுவலர் சுரேஷ் உள்ளிட்டோரும் இருந்தனர். அப்போது இரவு நேரம் ஆனதை அடுத்து அங்கு மின்சார விளக்குகள் பொருத்தப்பட்டு தேடும் பணி நடைபெற்றது. 30 பள்ளத்தில் தண்ணீர் இருந்ததையடுத்து உடலை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது. இதைதொடர்ந்து ஆழ்குழாய் கிணற்றில் பயன்படுத்தப்படும் கேமராவை தண்ணீருக்குள் செலுத்தி மானிட்டர் மூலம் தண்ணீர் நிறைந்த பள்ளத்தில் இருக்கும் இடம் கண்டறியப்பட்டது.

 


 

பின்னர் தீயணைப்பு மீட்பு பணி வீரர் ஞானசுந்தர் அந்த இடத்தில் நீருக்குள் மூழ்கி சிவாவின் உடலை மீட்டுக் கொண்டு வந்தார். இதை தொடர்ந்து மீட்கப்பட்ட மோனிகா மற்றும் சிவாவின் உடல்கள் நத்தம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி வழக்குபதிவு செய்து விசாரணை செய்தார். மேலும் இறந்து போன மோனிகா நடுவனூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 4ம் வகுப்பும், சிவா 3ம் வகுப்பு படித்து வந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தம்பியின் மகன், மகள் தண்ணீரில் மூழ்கி இறந்தது அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

 




 



 

Previous Post Next Post