தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் உள்ள நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள்- மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் ஆய்வு.!


தூத்துக்குடி மாவட்ட காவல் துறையில் ஆத்தூர் முதல் எஃப்.சி.ஐ ரவுண்டானா வரையிலும், எஃப்.சி.ஐ ரவுண்டானா முதல் வசவப்பபுரம் வரையிலும், ஆத்தூர் முதல் பெரியதாழை வரையிலும், செய்துங்கநல்லூர் முதல் திருச்செந்தூர் வரையிலும், தோட்டிலோவன்பட்டி முதல் பருத்திக்குளம் வரையிலும்,

புதூர் பாண்டியாபுரம் முதல் கோடாங்கிப்பட்டி வரையிலும், கிழக்கு கடற்கரைச் சாலையான மேல அரசடி முதல் தூத்துக்குடி மாவட்ட எல்லையான வேம்பார் வரையிலும் 7 நெடுஞ்சாலை ரோந்து பிரிவுகள் செயல்பட்டு வருகிறது.

இந்த நெடுஞ்சாலை பிரிவு ரோந்து பிரிவினர்களுக்கு வாகனம் மற்றும்  நெடுஞ்சாலையில் நடக்கும் விபத்துக்களில் பொதுமக்களுக்கு முதலுதவி செய்யக்கூடிய அளவில் அனைத்து உபகரணங்களும் வழங்கப்பபட்டுள்ளது. 

இதில் ஒவ்வொரு பிரிவிற்கும் 2 எஸ்.ஐ தலைமையில் போலீசார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியிலிருப்பார்கள்.

இந்நிலையில் இன்று மாவட்ட காவல்துறை வளாகத்தில் நெடுஞ்சாலை ரோந்துப் படையினரின் வாகனங்கள் முறைப்படி பராமரிக்கப்படுகிறதா எனவும், அவர்களுக்கு வழங்கப்பட்ட உபகரணங்கள் சரியாக இயங்கும் நிலையில் உள்ளதா எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார்  ஆய்வு செய்தார்.

அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கு தேவையில்லாமல் நிறுத்தியிருக்கும் வாகனங்களை எடுக்க வேண்டும், வாகனங்கள் பழுதாகி நிறுத்தப்பட்டிருந்தால், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வாகனத்தை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும், விபத்துக்கள் நிகழா வண்ணம் பார்த்துக் கொள்ளவேண்டும் எனவும், 

விபத்துக்கள் நேர்ந்தால் உடனடியாக 108க்கு அழைப்பு விடுத்து, அவர்களுக்கு தேவையான முதலுதவிகளை செய்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவ சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும். தேவைப்பட்டால் காவல்துறை வாகனங்களில் அவர்களை ஏற்றி அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும் எனவும், முன்னெச்சரிக்கையாக விபத்து ஏற்பட்ட இடத்தில் ஒளிரும் சிவப்பு முக்கோணம் மற்றும் கூம்புகளை வைத்து அடுத்த வாகனங்களுக்கு விபத்து ஏற்படாமல் தடுக்க  வேண்டும். 

நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களின் மேல் உள்ள சுழலும் விளக்குகள் எப்போதும் இயங்கவேண்டும், நெடுஞ்சாலை பிரிவு காவல்துறையினர் விழிப்புடன் பொது மக்களுக்கு உதவும் வகையில் பணியாற்ற வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

இந்நிகழ்வின் போது தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தூத்துக்குடி சைபர் குற்றப் பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர்  கண்ணபிரான், ஆயுதப்படை உதவி ஆய்வாளர் செல்வக்குமார் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.

Previous Post Next Post