செப். 1ல் பள்ளிகளை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.!


தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகளை திறக்க நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஆராயப்பட்டு உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் விருந்தினர் மாளிகையில் நிருபர்களிடம் கூறியதாவது: வருகிற செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை திறக்கலாம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

மாணவர்கள் வீட்டில் இருக்கும்போது மனதளவில் சோர்வடைந்து விடுகின்றனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக, மருத்துவ வல்லுனர் குழுவுடன் முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்தினார். அதில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 1-ந் தேதி முதல் பள்ளிகளை ஆரம்பிக்கலாம் என வல்லுனர் குழு பரிந்துரை செய்துள்ளது. தினமும் 50 சதவீதம் மாணவர்களை வரவழைக்கலாம் என முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

பள்ளிகள், வகுப்புகளை ஆரம்பிப்பது தொடர்பாக தேவையான தயார் நிலையில் இருக்கின்றனவா? என்பது தொடர்பாக அதில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளில் கூடுதலாக எதுவும் சேர்க்க வேண்டுமா என்பது குறித்து எல்லாம் ஆராயப்பட்டு உள்ளது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் இன்னும் 2 நாட்களில் வந்துவிடும். அவை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பி வைத்து தயார் நிலையை ஏற்படுத்துவோம்.

பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை குறைக்க ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. அதுதொடர்பாக வரைவு பாடத்திட்டம் தயார் செய்யப்பட்டு இருக்கிறது. அதில் எந்தெந்த வகுப்பிற்கு எத்தனை சதவீதம் குறைக்கப்படும் என்பது தெரிவிக்கப்படும். 

அரசு பள்ளிகளில் கடந்த வாரம் 2 லட்சத்து 4 ஆயிரத்து 379 பேர் சேர்ந்துள்ளனர். பொருளாதார ரீதியாக நலிவடைந்த பலர் அரசு பள்ளியை தேடி வந்து சேருகின்றனர். தமிழகத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. மாணவர்கள் அதிகமாக அரசு பள்ளியில் சேர்ந்தால் அதற்கு தேவையான கட்டமைப்பு வசதியை உருவாக்கி, ஆசிரியர்களை நியமித்து சூழ்நிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார். 

முன்னதாக அவரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி மற்றும் தி.மு.க.வினர் வரவேற்றனர். குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலிலும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சாமி தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு கோவில் நிர்வாக அதிகாரி கலைவாணன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Previous Post Next Post