164 பேர் ரவுடி பட்டியலில் இருந்து நீக்கம்!- எஸ்பி ஜெயக்குமார் நடவடிக்கை!


தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் எந்தவித குற்ற செயல்களில் ஈடுபடாமல் திருந்திய 164 பேருக்கான சரித்திரப்பதிவேடுளை ரத்து செய்ய எஸ்பி ஜெயக்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் சட்டவிரோத செயல்கள் மற்றும் ரவுடித்தனத்தில் அடிக்கடி ஈடுபடும் குற்றவாளிகள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சரித்திர குற்ற பதிவேடு (Rowdy History Sheet) பராமரிக்கப்பட்டு வருகிறது. அதில் உள்ள குற்றவாளிகளின் நடவடிக்கைகள் குறித்து அனைத்து காவல் நிலையங்களிலும் காவல் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இதுவரை தூத்துக்குடி மாவட்டத்தில் 1794 குற்றவாளிகள் மீது சரித்திர குற்ற பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 1794 சரித்திர குற்ற பதிவேடு கொண்ட குற்றவாளிகளின் கடந்த 5 ஆண்டு கால நடவடிக்கைகளை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில், மாவட்ட உட்கோட்ட காவல்துறை உதவி காண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்கள் கொண்ட ஆய்வுக்குழு ஆய்வு செய்தனர். 

இதில் கடந்த 5 ஆண்டுகளில் எவ்வித குற்ற செயல்களிலும் ஈடுபடாதவர்கள், வயதானவர்கள் என 164 பேர் மீது பராமரிக்கப்பட்டு வருபவர்களை இன்று காவல் அலுலவக கூட்ட அரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக விசாரணை செய்து, அவர்களது சரித்திர பதிவேடை முடித்து வைக்க அறிவுறுத்தினார். 

அப்போது ரத்து செய்யப்பட்டவர்கள் இனி வருங்காலங்களில், ஏதாவது குற்ற செயல்களில் ஈடுபட்டால் மறுபடியும் அவர்களுக்கு சரித்திரப்பதிவேடுகள் ஆரம்பிக்கப்படும் என்று எச்சரித்து, நாளை பிறக்கின்ற புத்தாண்டு தினத்தில் புதுவாழ்வு வாழ அவர்களை வாழ்த்தி அனுப்பினார்.

இக்கூட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், உதவி கண்காணிப்பாளர்கள் திருச்செந்தூர் ஹர்ஷ் சிங், தூத்துக்குடி ஊரகம் சந்தீஸ், துணை கண்காணிப்பாளர்கள் ஸ்ரீவைகுண்டம் வெங்கடேசன், மணியாச்சி சங்கர், 

விளாத்திகுளம் பிரகாஷ், சாத்தான்குளம் ராஜூ, நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு சம்பத், மாவட்ட குற்ற பிரிவு ஜெயராம், பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் ஷாமளா தேவி, மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உள்ளிட்ட காவல்துறையினர் கலந்துகொண்டனர்.

Previous Post Next Post