திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆடி ஸ்வாதியை முன்னிட்டு, விபூதி பூசப்பட்ட வௌ்ளை யானை முன் செல்ல, சுந்தரமூர்த்தி நாயனார் சுவாமிகள் சப்பரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆடி ஸ்வாதியை முன்னிட்டு, விபூதி பூசப்பட்ட வௌ்ளை யானை முன் செல்ல, சுந்தரமூர்த்தி நாயனார் சுவாமிகள் சப்பரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 


ஆடி ஸ்வாதி நட்சத்திரத்தன்று, 63 நாயன்மார்களில் ஒருவரான சேரமான்பெருமானுக்கு திருக்கைலாய மலையில் சிவபெருமான் ஐராவதம் (வௌ்ளை யானை) உருவத்தில் காட்சி கொடுத்தார் என்பது ஐதீகம். இதையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆடி ஸ்வாதியை முன்னிட்டு நேற்று அதிகாலை, 5 மணிக்கு கோயில்நடை திறக்கப்பட்டது. அதிகாலை, 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மற்ற காலபூஜைகள் வழக்கம் போல் நடந்தன. பின், மாலையில் கோயில் யானை தெய்வானை  உடல் முழுவதும் விபூதி பூசப்பட்டு, வௌ்ளை நிறத்தில் மாற்றப்பட்டது. பின்னர் கோயில் சண்முகவிலாச மண்டபத்திலிருந்து, 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்திரமூர்த்தி நாயனார் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா புறப்பட்டனர். விபூதி பூசப்ப்பட்ட வௌ்ளை யானை முன் செல்ல சுந்தரமூர்த்தி நாயனார் சப்பரத்தில் வீதி உலா வந்து மீண்டும் கோயிலை சேர்ந்தார். பின், கோயில் உள்பிரகாரத்தில், 108 மகாதேவர் சன்னதியில் இருந்து வௌ்ளை யானை முன் செல்ல, சேரமான்பெருமானும், மாணிக்கவாசகரும் தனித்தனி பல்லாக்கில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் குமரதுரை மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


Previous Post Next Post