சொந்த மாநிலத்துக்கு அனுப்ப சொல்லி ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் உள்ளிருப்பு போராட்டம் கொரோனா பரவும் அபாயம்.
சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் கவுல் பஜார் பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் தங்கி வேலைப்பார்த்து வருகின்றனர். தற்பொழுது ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்ட நிலையில், வேலை இல்லாமல் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் இருந்ததால், தங்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போதிய சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவதால், அப்பகுதியில் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த சங்கர் நகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்களது வாகனத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட வட இந்திய தொழிலாளர்கள் கூச்சலிட்டனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பரங்கிமலை சரக காவல் துணை ஆணையாளர் பிரபாகர், பல்லாவரம் காவல் உதவி ஆணையாளர் தேவராஜ் மற்றும் சங்கர் நகர் காவல் ஆய்வாளர் முகமது பரக்கத்துல்லா ஆகிய காவல்துறை உயரதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் உயரதிகாரிகளிடம் பேசி இரண்டு நாளில் சொந்த ஊர் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்வதாக உறுதியளித்தனர். அதனையேற்று போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அங்கிருந்து அமைதியாக களைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:
மாவட்ட செய்திகள்