சென்னையை அடுத்த மேடவாக்கத்தில் ரூ.95.21 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். திறந்து வைத்த மேம்பாலத்தில் முதலமைச்சர் வாகனம் பயணம் செய்தது. பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வாகன பயன்பாடும் அதிகரித்து வருகிறது. தலைநகர் சென்னையில் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தப்படுகிறது. அந்த வகையில், தாம்பரம் - வேளச்சேரி மார்க்கத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. 2.03 கி.மீ. நீளமும், 11 மீட்டர் அகலமும் கொண்ட மேடவாக்கம் மேம்பாலம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள தற்போதைய பாலங்களில் மிகவும் நீளமான மேம்பாலமாகும்.
ரூ.95 கோடி செலவில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ள மேம்பாலத்தால் போக்குவரத்து நெரிசல் குறையும். தற்போது மேடவாக்கத்தில் புதிதாக கட்டப்பட்ட பாலத்துக்கு மறைமலை அடிகள் பாலம் என பெயரிடப்பட்டுள்ளது. 2016ல் தொடங்கப்பட்ட மேம்பாலத்தின் ஒரு பகுதியான வேளச்சேரி - தாம்பரம் ஒருவழி பாலம் கடந்தாண்டு திறக்கப்பட்டது. புதிதாக திறக்கப்பட்டுள்ள மேம்பாலம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு முழுமையாக வரும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.